Published : 14 Mar 2015 09:42 AM
Last Updated : 14 Mar 2015 09:42 AM

தமிழக முதல்வருடன் மலேசியாவின் பெரா மாகாண முதல்வர் சந்திப்பு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மலேசிய நாட்டின் பெரா மாகாண முதல்வர் அப்துல் காதர் நேற்று சந்தித்துப் பேசினார்.

மலேசியா நாட்டில் உள்ள பெரா மாகாணத்தின் முதல்வர் அப்துல் காதர் தலைமையில் வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆராய, மலேசிய குழு தமிழகம் வந்துள்ளது.

பெரா மாகாண முதல்வர் அப்துல் காதர் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.

அப்போது முதல்வர் பன்னீர்செல்வம், தமிழ்நாட்டுக்கும் மலேசியாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் சமூக, பொருளாதார, கலாச்சார தொடர்புகளை நினைவுகூர்ந்தார். மேலும், ஆட்டோமொபைல் துறையில் தமிழகமும், பெரா மாகாணமும் சிறந்து விளங்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழ்நாட்டில் வேளாண்பொருள் பதப்படுத்துதல், ரசாயனம், ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிப்பு, உள்கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை எடுத்துரைத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் மே மாதம் 23, 24-ம் தேதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரா மாகாண வர்த்தகக் குழுவினர் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, பெரா மாகாண தொழில்துறை அமைச்சர் முகமது ஜாகீர் அப்துல் காலித், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், , தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலர் சி.வி.சங்கர், நிதித்துறை முதன்மைச் செயலர் கே.சண்முகம், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x