Published : 13 Mar 2015 05:57 PM
Last Updated : 13 Mar 2015 05:57 PM

தமிழகத்தில் நடுநிலை வாக்காளர்கள் ஆதரவுடன் பாமக ஆட்சி: அன்புமணி நம்பிக்கை

தமிழகத்தில் 45 சதவீத நடுநிலை வாக்காளர்கள் ஆதரவுடன் 2016-ல் பாமக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தார்.

பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், மதுரையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிமுக ஆட்சியில் அரசுக்கு ஒரு லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது. ஆற்று மணல், தாது மணல், கிரானைட் என அனைத்து இயற்கை வளத்திலும் ஊழல் அதிகரித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் எதிர்ப்பு வாக்குகளைப் பதிவு செய்வதைத்தான் மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால்தான் அதிமுக, திமுக மாறி, மாறி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்கு வந்தது.

தற்போது இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதாக எந்த கட்சியும் முன்வந்து சொல்லவில்லை. 65 ஆண்டுகால பழமையான கட்சியான திமுகவால் கடந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.

இந்நிலையில், 2016-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்களின் எதிர்பார்ப்பை விஜயகாந்தும் பூர்த்தி செய்யவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.

இந்த சூழ்நிலையில், அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அளவுக்கு தகுதியான கட்சி பாமக மட்டுமே. இக்கட்சிக்கு மட்டுமே தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் உள்ளனர்.

இளைஞர், மருத்துவர், ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்தபோது வெற்றிகரமாக பல திட்டங்களை செயல்படுத்தியவர் என்ற நிலையில் முதல்வர் வேட்பாளராக நான் நிற்கிறேன். இதை 45 சதவீத நடுத்தர வாக்காளர்கள் ஏற்கத் தயாராக உள்ளனர். இதுவரை 12 மாவட்டத்தினரை சந்தித்ததில் மாற்றம் தெரிகிறது.

தென் மாவட்டங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம். வலுவானவர்களுடன் கூட்டணி அமைப்போம். மதுரையில் வரும் ஜுலையிலும், நெல்லையில் ஆகஸ்ட் மாதத்திலும் கட்சியின் மண்டல மாநாடு நடத்தப்படும்.

பாமக சாதி அடிப்படையில் செயல்படுகிறது என்ற தவறான முத்திரையை சிலர் குத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்டவர்களை அமைச்சர்களாகவும், கட்சியில் முக்கிய பதவி கொடுத்தும் அழகு பார்ப்பது பாமக. தென் மாவட்டங்களில் சாதி அடிப்படையில் கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து திமுக உள்ளிட்ட எந்த கட்சியாவது உண்மை அறியும் குழுவை அனுப்பியுள்ளதா?.

பாமக ஆட்சியமைத்தால் மது ஒழியும். இயற்கை கனிமங்களை கையாள்வதில் வெளிப்படைத்தன்மை, இலவசங்கள் ரத்து மூலம் பெருமளவு நிதியை திரட்டி அரசு வளர்ச்சித் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்" என்றார் அன்புமணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x