Published : 18 Mar 2015 09:21 AM
Last Updated : 18 Mar 2015 09:21 AM

ஆண்டு விழா கொண்டாட குறைந்த தொகை ஒதுக்கீடு: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேதனை

அரசுப் பள்ளிகளில் சொற்ப தொகையைக் கொண்டு ஆண்டு விழா நடத்தும்படி வழங்கப்பட்ட உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மூலம் சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2500, 200-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி மார்ச்க்குள் ஆண்டு விழா நடத்த என எஸ்எஸ்ஏ நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. இந்த உத்தரவால் தருமபுரி மாவட்ட அரசு நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

ஆண்டு விழாவுக்கு கிராம கல்விக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, உள்ளாட்சி பிரமுகர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரை அழைக்கவும், கலை நிகழ்ச்சி நடத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், விழாவை வீடியோ மற்றும் போட்டோ கவரேஜ் செய்து அதற்கான சிடி ஆதாரத்தை வட்டார வள மையத்தில் சேர்ப்பிக்க வேண்டும். அங்கிருந்து அந்த சிடி-க்கள் எஸ்எஸ்ஏ அலுவலகத்துக்கு போய் சேரும். அழைப்பாளர்களுக்கு விழாவில் குறைந்தபட்ச மரியாதை செய்ய வேண்டும். கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகளுக்கு சிறு பரிசுகளாவது வழங்க வேண்டும் ஆண்டு விழாவுக்கு ஆடியோ சிஸ்டம் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத ஒன்று. வீடியோ, போட்டோ கவரேஜ் செய்ய கணிசமாக செலவாகும். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், சொற்பத் தொகையை மட்டும் பள்ளி வங்கிக் கணக்கில் சேர்த்து அதைக் கொண்டு ஆண்டுவிழா நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

தருமபுரி மட்டுமன்றி தமிழகம் முழுக்கவே இந்த பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகிறது. நிதியாண்டு முடியும் தருணத்தில் திட்டமிடுவதால் தான் இதுபோன்ற சிரமங்கள் உண்டாகிறது. முன் கூட்டியே ஆக்கபூர்வமாக திட்ட மிட்டால் கல்வித்துறையின் சீரிய மேம்பாட்டுக்கு இந்த நிதி பயன்படும். ஆண்டுவிழா விவ காரத்தால் ஆசிரியர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையை போக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கல்வி அதிகாரி பதில்

தருமபுரி மாவட்ட எஸ்எஸ்ஏ முதன்மைக் கல்வி அலுவலர் சீமானிடம் இதுபற்றி கேட்டபோது, ‘மேலிடம் அனுமதித்த தொகையை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம். சற்றே பண நெருக்கடி ஏற்படலாம். இருப்பினும், உயர் அதிகாரிகள் உத்தர விட்டிருப்பதால் ஆசிரியர்கள் எளிமையான முறை யிலாவது ஆண்டு விழாவை நடத்தி முடிக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x