Published : 28 May 2014 10:34 AM
Last Updated : 28 May 2014 10:34 AM

கத்தரி வெயில் இன்று முடிகிறது: வெயில் குறையும் என எதிர்பார்ப்பு

கடந்த ஒரு மாதமாக மக்களை வாட்டி வதைத்து வந்த கத்தரி வெயில் வியாழக்கிழமை யுடன் (மே 28) முடிகிறது. இனி வெயிலின் தாக்கம் குறை யும் என எதிர்பார்க்கப்படு கிறது.

கத்தரி வெயில் தமிழகத்தில் மே 4-ம் தேதி தொடங்கியது. இந்த காலத்தில், வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருக்கும். எனவே வேலூர், சேலம், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் பல நாட்கள் நீடித்தது.

சென்னையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வெயில் 110 டிகிரியை தொட்டது. 2003-ம் ஆண்டு சென்னை மற்றும் வேலூரில் பதிவாகிய 113 டிகிரி தான் தமிழகத்தில், இதுவரை மே மாதங்களில் பதிவான அதிகபட்ச வெப்பமாகும். இந்த ஆண்டு 113 டிகிரியை தொடவில்லை என்றாலும், வெயில் கொளுத்தத்தான் செய்தது.

ஜூன் மாதத்தில் வெயில் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வேலூர், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஜூன் மாதத்திலும் ஒரு சில நாட்கள் வெயில் அதிகமாக இருக்கலாம் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

வெயிலின் உக்கிரம் என்பது உள் மாவட்டங்களில், மழைப்பொழிவைப் பொறுத்து அமைகிறது. அதேபோன்று கடலோர மாவட்டங்களில் கடல் காற்று வீச ஆரம்பிக்கும் நேரத்தை பொறுத்து அமைகிறது. எனவே ஜூன் மாதத்தில் ஒரு சில நாட்களில் வெயில் அதிகபட்சமாக இருக்கலாம். ஆனால் மே மாதம் போன்று தொடர்ந்து வெயில் அதிகமாக இருக்கும் என்று கூற முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 3 செ.மீ. மழையும், ஆரணியில் ஒரு செ.மீ. மழையும் பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் மாதம் 5-ம் தேதி முதல், தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்த பருவ மழையின்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x