பஸ் - ஆம்னி வேன் மோதல்: 4 பேர் பலி

பஸ் - ஆம்னி வேன் மோதல்: 4 பேர் பலி
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே நேற்று தனியார் பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நாமக்கல்லைச் சேர்ந்த சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் கணேசபுரம் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ்(47). இவர், மனைவி காமாட்சி(37), மகன் ராம்குமார்(18), மகள் யாழினி(11), உறவினர் பழனிவேல்(62), அவரது மனைவி ராதா (55) ஆகியோருடன் ஆம்னி வேனில் நாமக்கல்லிலிருந்து கும்பகோணம் சென்றுகொண்டிருந்தனர். இந்த வேனை சதீஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில், மாத்தூர் வளைவு அருகே சென்றபோது, வேன் மீது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில், வேன் உருக்குலைந்தது. வேனில் பயணம் செய்த நாகராஜ், காமாட்சி, ராதா, ஓட்டுநர் சதீஷ் ஆகியோர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பழனிவேல், யாழினி, ராம்குமார் ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள், விபத்துக்குக் காரணமான தனியார் பேருந்தை அடித்து நொறுக்கினர். இதில், பேருந்து நடத்துநர் கும்பகோணம் முனியசாமி (48) காயமடைந்தார். ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in