Published : 18 Mar 2015 08:55 AM
Last Updated : 18 Mar 2015 08:55 AM

வெளிமாநிலத் தொழிலாளர்களின் கைரேகையை பெற வேண்டும்: தனியார் நிறுவனங்களுக்கு போலீஸார் திடீர் உத்தரவு

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள், அவர்களுடைய கைரேகையை கட்டாயம் பெறவேண்டும் என போலீஸார் புது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் சமீபகாலமாக வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், குவாரிகளில் பணிபுரிய உள்ளூர் தொழிலாளர்கள் கூடுதல் ஊதியம், நிர்ணயிக்கப்பட்ட நேரம், சிறப்பு சலுகைகள் கேட்கின்றனர். அதனால், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிஸா, ராஜஸ்தான், அசாம், சிக்கிம் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களை வேலைக்கு அழைத்து வருவதற்காகவே, கமிஷன் அடிப்படையில் இடைத்தரகர்கள் செயல்படுகின்றனர்.

இவர்களில் பலர், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காமலும் வேலை பிடிக்காமலும் கொஞ்ச நாளிலேயே சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். சில தொழிலாளர்கள் போதிய ஊதியம் கிடைக்காத அதிருப்தியில் திருட்டு, வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் பல கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கொள்ளைகளில் வடமாநிலத்தவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், வெளிமாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டோர், போலீஸுக்கு பயந்து இங்கே வந்து வேலை செய்வதும் உண்டு. 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஓசூர் தொழிற்சாலை ஒன்றில் அசாம் மாநிலத்தில் தேடப்பட்ட பொடோ தீவிரவாதி சாதாரண தொழிலாளிபோல் வேலை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை தமிழக போலீஸார் சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக தமிழக சுற்றுலா மற்றும் தொழில் நகரங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை போலீஸார் கணக்கெடுத்தனர். இதுவரை 75 சதவீத தொழிலாளர்களின் விவரத்தை கணக்கெடுத்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களை கணக்கெடுப்பு பட்டியலில் கொண்டு வரவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் எஸ்.பி. சரவணன் கூறும்போது, ‘‘வெளிமாநில தொழிலாளர்கள் அனைவர் மீதும் சந்தேகப்பட முடியாது. சிலர், குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு தங்கள் மாநிலத்துக்கு தப்பிச் செல்கின்றனர். அதேபோல குற்றப்பின்னணி உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிலர், இங்கு வேலைபார்க்கின்றனர். இதனால், வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் முன்பு அவர்களது கைரேகையை பெறவேண்டும் என்றும், கைரேகை பெற்ற பிறகே வேலை வழங்கவும் தனியார் நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றார்.

புதிய சட்டத்தின்கீழ் ஒருவர் கூட கைது இல்லை:

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் 5 பேரை, 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை வேளச்சேரியில் வைத்து போலீஸார் சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர்.

வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருபவர்கள், அந்தத் தொழிலாளி குறித்த விவரங்களை தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

சில மாதங்கள் மட்டும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்ட இந்த உத்தரவுகள், பின்னர் வழக்கம்போல நீர்த்துப்போனது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் சிறுசேரியில் ஐடி நிறுவன பெண் பணியாளர் உமா மகேஸ்வரி, வெளிமாநில தொழிலாளர்களால் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு, வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பில் போலீஸார் மீண்டும் தீவிரம் காட்டினர். அதுவும் இப்போது குறைந்துவிட்டது.

வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள், அவர்கள் குறித்த தகவலை அருகே உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்காவிட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால், இந்தச் சட்டத்தின்கீழ் ஒருவரைகூட கைது செய்ததாக இதுவரை தகவல் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x