Published : 24 Mar 2015 08:44 AM
Last Updated : 24 Mar 2015 08:44 AM

வேலூர் ஆட்சியர் கார் மோதி இளைஞர் பலி: துரைமுருகன் தலைமையில் திமுகவினர் சாலை மறியல்

காட்பாடியில் வேலூர் மாவட்ட ஆட்சியரின் கார் மோதி இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து ஆட்சி யர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலை மையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி யளவில் கார்ணாம்பட்டில் இருந்து வேலூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ஆட்சியரின் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொ ருவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘மாவட்ட ஆட்சியரின் கார் மோதி இறந்தவர் கார்ணாம்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் வளர்மதியின் மகன் ராஜ்குமார் (23). இவருடன் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் (27). இவர்கள் இருவரும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்து விபத்தில் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக காட்பாடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்’’ என்றனர்.

இந்நிலையில், ஆட்சியர் ஆர்.நந்தகோபால்தான் விபத்துக்கு காரணமான காரை ஓட்டிவந்த தாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி, திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அக்கட்சியினர் கார்ணாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட திமுகவினர் காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வேலூர்- காட்பாடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு, காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து மறியல் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x