Last Updated : 19 Mar, 2015 08:44 AM

 

Published : 19 Mar 2015 08:44 AM
Last Updated : 19 Mar 2015 08:44 AM

சமூக வலைதளங்களில் உள்நோக்கத்துடன் பெண்களின் படங்களை பரப்புவோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: போலீஸார் கடும் எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பெண்களின் படத்தை உள் நோக்கத்துடன் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் பெண் போலீஸ் ஒருவருடன் காவல் உதவி ஆணையர் செல்போனில் பேசிய உரையாடல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த உதவி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையரின் படம் வெளியே வந்துவிட்டது. ஆனால், அவருடன் பேசிய பெண் போலீஸின் படம் வெளிவரவில்லை.

இதை சாதகமாக பயன் படுத்திக்கொண்ட சிலர், தங் களுக்கு வேண்டாத பெண்களின் படங்களை போட்டு ‘இதுதான் அந்த பெண் போலீஸ்’ என்ற தலைப்புடன் வதந்தி பரப்பி வருகின்றனர். இப்படி, கடந்த 2 நாட்களாக ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன.

இவ்வாறாக முன்னாள் பத்திரிகையாளர், மணமகன் தேவைக்காக போட்டோ கொடுத்தவர் உட்பட ஏராளமான பெண்களின் படங்கள் பரவி விட்டன. இதை அறிந்ததும் சம்பந்தப்பட்ட பெண்களும், அவர்களின் உறவினர்களும் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படம், பிரபல கொள்ளைக்காரி என்ற தலைப்பில் சென்னையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுக்க, அதன் பிறகே உண்மை வெளிவந்தது. இதேபோல, உள்நோக்கத்துடன் பலரது படங்கள் தவறான முறையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.

இது குறித்து சைபர் கிரைம் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பெண்களின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் பரப்பு பவர்கள் கைது செய்யப்படு வார்கள். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

மேலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின் கீழ், பெண்களின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்.

எளிதாக கண்டுபிடிக்கலாம்

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை பரப்புபவர்களை அவர்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து விடுவோம். வாட்ஸ்அப் மூலம் பரப்புபவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமே தவிர, நிச்சயம் கண்டுபிடித்து விடலாம். இதனால், இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடும் யாரும் தப்பிக்க முடியாது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x