தாமரையுடன் சேர மாட்டேன்: தியாகு திட்டவட்டம்

தாமரையுடன் சேர மாட்டேன்: தியாகு திட்டவட்டம்
Updated on
1 min read

தாமரையுடன் இனியும் இணைந்து வாழும் எண்ணம் இல்லை என்று தியாகு கூறியுள்ளார்.

தனது கணவரும், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தியாகு கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறி கவிஞர் தாமரை, பிப்ரவரி 27-ம் தேதி முதல் தியாகுவின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

தனது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால் கணவர் தியாகு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கவிஞர் தாமரை தெரிவித்தார்.

தாமரையுடன் சந்திப்பு

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாமரையை தியாகு சந்தித்தார். அவரிடமும் மகன் சமரனிடமும் மன்னிப்புக்கோரி கடிதம் ஒன்றை கொடுத்தார்

இதைத் தொடர்ந்து தனது தர்ணா போராட்டத்தை முடித் துக்கொண்டு தாமரை வீடு திரும்பினார்.

இதுகுறித்து தியாகுவிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

என் வருத்தத்தை ஏற்றுக் கொண்டு இருவரும் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி. இப்போது வேளச்சேரியில் மகள் வீட்டில் இருக்கிறேன். ஆனால், இனியும் தாமரையுடன் இணைந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in