

சட்டப்பேரவை தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமையும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் மக்களவை உறுப்பினரும், பாமக இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியது: ''கடந்த பிப்ரவரி மாதம் 15–ம் தேதி சேலத்தில் நடந்த பாமக மாநாட்டில் வருகிற 2016 சட்டமன்ற தேர்தலுக்கான பாமக முதல் அமைச்சர் வேட்பாளராக என்னை தேர்வு செய்திருக்கிறார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமையும். எங்கள் தலைமையில் மற்ற கட்சிகள் இணைய விரும்பினால் வரவேற்கிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பெரிய பிரச்சனைகளாக உள்ள மது, ஊழல் ஆகிய இரண்டையும் ஒழிப்பதே முதல் குறிக்கோள்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.