Published : 19 Mar 2015 04:01 PM
Last Updated : 19 Mar 2015 04:01 PM

பாலியல் தொந்தரவு புகார்: தருமபுரியில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

தருமபுரி மாவட்டத்தில் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பேடரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சோளப்பாடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. ஈராசிரியர் பள்ளியான இதில் பணியாற்றி வந்த சக்திவேல் என்ற ஆசிரியர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாகவும், மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் சமீபத்தில் புகார் எழுந்தது.

அதையொட்டி கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் சக்திவேல் மதுஅருந்திவிட்டு பணிக்கு வந்ததாகக் கூறி அவரை 2 நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்தனர். அப்போது பாலியல் தொல்லை தொடர்பான புகார் நிரூபிக்கப்படவில்லை என கூறப்பட்டது. இருப்பினும் சிறுமிகளிடம் தவறாக நடக்க முயன்ற விவகாரத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடக்க முயன்றது உறுதி செய்யப்பட்டது. எனவே நேற்று அவரை பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம்-2012 (போக்ஸோ)ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x