Published : 03 Mar 2015 08:14 PM
Last Updated : 03 Mar 2015 08:14 PM

மார்ச் 11-ல் தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை

தமிழக - இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதன் படி வரும் 11-ம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை தவிர்த்தல் போன்றவை தொடர்பாக இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே ஏற்கெனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

மீனவர்களிடையேயான 3-வது கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துவந்த நிலையில், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

இதையடுத்து, பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவது குறித்து இலங்கைக்கான இந்திய தூதுவர் சின்ஹா அந்நாட்டு அமைச்சர் ஜோசப் மைக்கேல் ஃபெரேராவை கொழும்புவில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பிரதமர் மோடி மார்ச் 13-ம் தேதி இலங்கை பயணம் மேற்கொள்வதால் அதற்கு முன்பே மீனவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்ட ஃபெரேரா இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோருடனும் இது குறித்து ஆலோசனை நடத்தும்படி அறிவுறுத்தி உள்ளார்.

அந்த ஆலோசனைக்குப் பின் பேச்சுவார்த்தைக்கான தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், தற்போதைய நிலையில் மார்ச் 11-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x