Published : 03 Mar 2015 09:48 AM
Last Updated : 03 Mar 2015 09:48 AM

புதிய ஓய்வூதிய திட்டம் கூடாது: மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை எந்த ஒரு மத்திய அரசு அலுவலகத்திலும் அமல்படுத்தக் கூடாது என்று ரயில்வே, பாதுகாப்பு, தபால் மற்றும் மத்திய அரசு ஊழியர் சங் கங்களின் கூட்டு போராட்ட குழுவின் அமைப்பாளர் என்.கண்ணையா வலியுறுத்தியுள்ளார்.

ரயில்வே,பாதுகாப்பு,தபால் மற்றும் மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்ட குழு சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்ட குழுவின் அமைப்பாளர் என்.கண்ணையா பேசியதாவது:

“பாதுகாப்பு துறைக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ரயில்வே துறையில் உள்ளனர். ஆனால் தற்போது ரயில்வே துறையில் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு (ராணுவம்) பாதுகாப்பு துறையில் 26 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அமல்படுத்தியது. தற்போது புதியதாக மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக அரசும் பாதுகாப்பு துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அரணாக உள்ள ராணுவத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் எதிர்காலத்தில் வெளிநாட்டு சக்திகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டையும், தனியார் பங்களிப்பையும் அனுமதிக்க கூடாது.

தபால் துறையில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசின் கீழ் உள்ள எந்த அலுவலகத்திலும் அமல்படுத்த கூடாது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் சார்பாக பேரணி நடத்தவுள்ளோம்”

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x