Published : 03 Apr 2014 01:15 PM
Last Updated : 03 Apr 2014 01:15 PM

இந்தியன் வங்கிச் சேவை பாதிப்பு: செயற்கைக்கோள் இணைப்பு கிடைக்காததே காரணம்

செயற்கைக்கோள் இணைப்பு கிடைக்காததால் சென்னையில் புதன்கிழமை இந்தியன் வங்கிச் சேவை 2 மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

நிதியாண்டின் தொடக்க நாள் என்பதால் கடந்த செவ்வாய்க்கிழமை வங்கிச் சேவை இல்லை. அதனால் புதன்கிழமை வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. இந்தியன் வங்கியின் புரசைவாக்கம் கிளையில் வாடிக்கையாளர்கள் காலை 8.30 மணிக்கே வந்து காத்திருந்தனர். 9 மணிக்குத்தான் வங்கிக்குள் செல்ல அனுமதித்தனர். வாடிக்கையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். ஆனால் காலை 9.10 மணிக்கு மேலாகியும் சேவைகள் தொடங்கவில்லை

சிறிது நேரம் கழித்து அந்த வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் வந்து, “இந்தியன் வங்கியின் கம்ப்யூட்டர் சர்வருக்கு செயற்கைக்கோள் இணைப்பு கிடைக்காததால் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்தியன் வங்கி கிளைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பகல் 11 மணிக்கு மேல் வாருங்கள்” என்றார். அதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். காலையில் வந்த வாடிக்கையாளர்கள் சில மணி நேரம் காத்திருந்துதான் சேவையைப் பெற முடிந்தது.

சென்னையில் உள்ள அனைத்து இந்தியன் வங்கிக் கிளைகளிலும் இந்தப் பாதிப்பு இருந்தது என்றும், இதுபோல சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளிலும், பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்றும் வங்கி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x