Published : 23 Mar 2015 10:50 AM
Last Updated : 23 Mar 2015 10:50 AM
இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று சிறையில் அடைத்துள்ள தமிழக மீனவர்கள் 54 பேரையும், அவர்களது 10 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர் செல்வம் நேற்றிரவு எழுதிய கடிதத்தின் விவரம்:
பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களிடையே உள்ள பிரச்சினைக்கு இருதரப்பு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, இரு நாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 24ம் தேதி (நாளை) சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக இலங்கை மீனவ சங்கப் பிரதிநிதிகள் திங்கள்கிழமை சென்னை வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் இருவேறு சம்பவங்களில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன் அவர்களது 10 படகுகளையும் கொண்டு சென் றுள்ளனர். இந்த சம்பவம், தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றத்தை தணிக்கவும், 24-ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை பாதிக்காமல் இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க தாங்கள் தலையிட வேண்டும். இதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு 54 மீனவர்களையும், அவர்களது 10 படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT