Published : 22 Mar 2015 11:28 AM
Last Updated : 22 Mar 2015 11:28 AM

வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி முதல்வர் வீட்டை ஆம் ஆத்மி முற்றுகை

வேளாண்துறை அதிகாரி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை மற்றும் வேளாண் துறையில் பணி நியமன முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மனு கொடுக்க ஆம் ஆத்மி கட்சியினர் முடிவு செய்தனர்.

இதற்காக அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முதல்வரின் வீட்டுக்கு நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்றனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், முதல்வரை சந்திக்க முடியாது எனக்கூறி அவர்களை தடுத்தனர். அப்போது போலீஸாருக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

முற்றுகையின்போது போலீஸார் தடுத்ததில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த காஜா மொய்தீன் உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x