Published : 17 Mar 2015 08:53 AM
Last Updated : 17 Mar 2015 08:53 AM
திரிகோணமலை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்கள் படகுகள் இன்றி தாயகம் திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம், காரைக் காலைச் சேர்ந்த 86 மீனவர்கள் பிப்.26-ம் தேதி 10 விசைப்படகு களில் கச்சத்தீவு, முல்லைத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து யாழ்ப்பாணம் சிறையில் 43 பேரையும், திரிகோணமலை சிறையில் 43 பேரையும் அடைத்தனர். இவர்களது நீதிமன்றக் காவல் மார்ச் 13-ம் தேதி முடிவடைந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு 86 தமிழக மீனவர்களை பருத்தித் துறை, திரிகோணமலை நீதிமன்றங்கள் கடந்த வெள்ளிக் கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டன. ஆனால், கைப்பற்றப்பட்ட 10 படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து யாழ்ப் பாணம் சிறையில் அடைக்கப்பட்ட 43 மீனவர்கள் மட்டும் படகுகள் இன்றி நாகப்பட்டினம் துறை முகத்துக்கு சனிக்கிழமை திரும்பினர். திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 43 மீனவர்கள் திங்கள்கிழமை தாயகம் திரும்புவதாக இருந்தது.
ஆனால், இவர்கள் தங்களது படகுகளையும் சேர்த்து விடுவித்தால் மட்டுமே தாயகம் திரும்புவோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் 43 தமிழக மீனவர்களும் யாழ்ப் பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT