Last Updated : 27 Feb, 2014 12:00 AM

 

Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

திரிசங்கு சொர்க்கத்தில் நாகை அதிமுக வேட்பாளர்- கூட்டணிக்கு தொகுதி போகக்கூடும் என்பதால் கவலை

நாகைத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் கோபால் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் இருக்கிறார். தொகுதி கூட்டணித் தோழர்களுக்குப் போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலைதான் இதற்குக் காரணம்.

கடந்தமுறை நாகையை அதிமுக கூட்டணியின் சார்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியிருந்தார்கள். இந்தமுறையும் நாகைத் தொகுதியைக் கேட்கிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

கடந்த முறை தோற்றுப்போன முன்னாள் எம்.பி-யான செல்வராஜை இந்த முறை எப்படியும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்பது தோழர்களின் ஆர்வம். இதற்காக, கட்சித் தலைமையிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறார்கள்.

இது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் கோபாலின் மகிழ்ச்சியைக் கெடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதலில் கோபால் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கோபித்துக்கொண்டு போன தோழர்கள் திரும்பி வந்ததும் திருத்துறைப்பூண்டித் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கோபாலைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொண்டது அதிமுக. அதேபோல் இந்த முறையும் ஏதாவது நடந்துவிடக்கூடாது என்பதுதான் கோபாலின் அச்சம். இதனால் அவர் எந்த ஆர்ப்பாட்டமும் காட்டாமல் அடக்கமாக இருக்கிறார்.

இதுகுறித்து அதிமுக சார்பாக நம்மிடம் பேசியவர்கள், ’’கோபால் யோசிக்கவே வேண்டாம். இந்த முறை நாகையில் அதிமுகதான் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் தலைமைக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால்தான் இவரை வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்துள்ளார்’’ என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x