Last Updated : 08 Mar, 2015 09:25 AM

 

Published : 08 Mar 2015 09:25 AM
Last Updated : 08 Mar 2015 09:25 AM

தமிழர் பகுதியில் படைகள் குறைப்பு இல்லை: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டம்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் முகாமிட்டுள்ள ராணுவ படைகள் இப்போதைக்கு குறைக்கப்படாது என்று அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் சில விஷயங் களில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

மாநில முதல்வர்களுக்கு தன்னாட்சி உரிமம் வழங்கினால், போலீஸ் துறை அவர்களின் சொந்த ராணுவமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவான ஆலோசனை நடத்தப் பட்டு வருகிறது. இந்திய ராணுவ நடைமுறைகளைப் பின்பற்றியே இலங்கையில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகளில் முகாமிட்டுள்ள ராணுவ படைகள் இப்போதைக்கு குறைக்கப்படாது. எதிர்காலத்தில் அங்கு நிலைமை மேம்பாட்டால் அதுகுறித்து பரிசீலிப்போம். நாடு முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அப்பகுதி மக்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் அரசை விமர்சித்து வருகிறார். ஆனால் உண்மை என்னவென்றால் தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை அதிகமாக விமர்சித்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங் களை இணைப்பது குறித்து இரு மாகாணங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதுகுறித்து முடிவு செய்ய பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்.

மீனவர் பிரச்சினை

இலங்கை மீனவர்கள் இந்தியப் பகுதியில் மீன் பிடித்தால் இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக் கும்? அதேபோல்தான் இலங்கை அரசும் தனது கடல் பகுதிக்குள் நுழையும் மீனவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கிறது. இது இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை. இதை பேசித் தீர்க்க வேண்டும்.

கச்சத் தீவு இலங்கைக்கே சொந்தம். எங்கள் மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டால் அதை எங்கள் நாட்டு சட்டம் ஏற்றுக் கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 86 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்கிறார்.இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x