

சென்னை: பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நடைபெற்ற ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை 17.10.2025 அன்று தலைமைச் செயலகத்தில், பஞ்சாப் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் மற்றும் பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிரேந்தர் குமார் கோயல் ஆகியோர் சந்தித்து, பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூரின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசின் சார்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோரை அவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், நேற்று (23.11.2025) ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நடைபெற்ற ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் மற்றும் நினைவுப் பரிசினை பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானிடம் வழங்கினார்கள்.
தமிழக மு.க.ஸ்டாலின், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், குரு தேக் பகதூர் ஜியின் 350வது தியாகிகள் தின நினைவேந்தல் விழாவில் கலந்துகொள்ளுமாறு தனக்கு அளித்த அழைப்பிற்கு மீண்டும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,
இந்த முக்கியமான நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியை தனது சார்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர்களை அன்புடன் வரவேற்க முன்வந்த தங்கள் நல்லெண்ணத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், நினைவுப் பரிசினை அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டார்.
விழா மிகச் சிறப்பாக நடைபெற தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதோடு, குரு தேக் பகதூர் அவர்கள் நிலைநாட்டிய துணிச்சல், கருணை மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய உன்னத இலட்சியங்களுக்கு தனது மரியாதையையும் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்’ எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.