Published : 19 Mar 2015 08:46 AM
Last Updated : 19 Mar 2015 08:46 AM

மார்ச் 23 முதல் செயல்படும்: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு தொடக்கம் - நீதித்துறை உறுப்பினராக நீதிபதி பி.ஜோதிமணி நியமனம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு, சென்னையில் மார்ச் 23-ம் தேதி தொடங்கப்படுகிறது. இதன் நீதித் துறை உறுப்பினராக நீதிபதி பி.ஜோதிமணி நியமிக்கப்பட் டுள்ளார்.

சுற்றுச்சூழல் சார்ந்த வழக்கு களை விரைந்து முடிப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைக்கப் பட்டது. அதன் முதன்மை அமர்வு டெல்லியில் உள்ளது. இதுதவிர, கொல்கத்தாவில் கிழக்கிந்திய அமர்வு, புணேயில் மேற்கிந்திய அமர்வு, போபாலில் மத்திய இந்திய அமர்வு, சென்னையில் தென்னிந்திய அமர்வு ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

தென்னிந்திய அமர்வு, 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அமைக்கப்பட்டது. இது, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட அலுவலக கட்டிடத்தின் 3-வது தளத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்து வரும் பெரிய அமர்வாக தென் னிந்திய அமர்வு திகழ்கிறது. இங்கு தினமும் குறைந்தது 30 முதல் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

அதனால், சென்னைக்கு 2-ம் அமர்வு கேட்டு தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைமைக்கு தென்னிந்திய அமர்வு கருத்துரு அனுப்பியது. இதற்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தளத்தில் 2-ம் அமர்வு அமைப் பதற்கான பணிகள் தொடங்கப் பட்டன. தற்போது பணிகள் முடிந்து, அமர்வுக்கான அரங்கம் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், தென்னிந்திய 2-ம் அமர்வின் நீதித்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை உறுப்பினர்களை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மார்ச் 17-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. ‘தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு நீதித் துறை உறுப்பினராக டெல்லியில் உள்ள முதன்மை அமர்வின் நீதித் துறை உறுப்பினர் பி.ஜோதி மணியும், தொழில்நுட்பத்துறை உறுப்பினராக போபாலில் உள்ள மத்திய இந்திய அமர்வின் தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவும் நியமிக்கப் படுகின்றனர். இந்த உத்தரவு மார்ச் 23-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய அமர்வின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தென்னிந்திய 2-ம் அமர்வுக்கான அரங்கங்கள் தயார் நிலையில் உள்ளன. நீதித்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை உறுப்பினர்கள் நியமிக்கப்பட் டுள்ள நிலையில் மார்ச் 23-ம் தேதி முதல் 2-ம் அமர்வு செயல்படும். எந்தெந்த வழக்குகளை 2-ம் அமர்வு விசாரிக்கும் என்பது குறித்து விரைவில் உத்தரவு வரும். தென்னிந்திய அமர்வு கலாஸ் மஹாலுக்கு மாற்றப்படும்போது பெரிய விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் 2-ம் அமர்வு தொடக்க விழா எளிமையாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x