Last Updated : 04 Mar, 2015 08:25 AM

 

Published : 04 Mar 2015 08:25 AM
Last Updated : 04 Mar 2015 08:25 AM

ஸ்மார்ட் நகரம் திட்டம் கைவிடப்படுகிறதா?- பட்ஜெட்டில் ஒன்றுமே சொல்லாத அருண் ஜேட்லி; குழப்பத்தில் மாநில அரசுகள்

நாடு முழுவதும் 100 இடங்களில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் இதுபற்றி ஒரு வார்த்தைகூட அருண் ஜேட்லி சொல்லாதது, மாநில அரசுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் மத்தியில் புதிதாக பொறுப்பேற்ற பாஜக அரசு, தனது முதல் நிதிநிலை அறிக்கையில், நாட்டில் 100 இடங்களில் ரூ.7,060 கோடி செலவில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தது. நாட்டில் அதிக நகரப்பகுதிகள் உருவாவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக் கப்பட்டது. அனைத்து பொதுச் சேவைகளையும் மின்மயமாக்கும் வகையிலும், மின்னணு நிறுவனங் கள் அதிகம் செயல்படும் வகையிலும் இத்திட்டம் செயல் படுத்தப்படும் என கூறப்பட்டது. இத்திட்டத்தில் தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள பொன் னேரியும் இடம்பெற்றிருந்தது.

மாநிலங்களுடன் ஆலோசனை

ஸ்மார்ட் நகரம் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் ஆலோசனை நடத்தி னார். இதற்கிடையே, தமிழகத்தில் 3 இடங்களில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க பரிசீலித்து வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட்டால், அதில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள சில நாடுகள் தெரிவித்திருந்தன. தமிழக முதல்வரை சிங்கப்பூர் அதிகாரிகள் சந்தித்தபோதும் அதுபற்றி ஆலோசனை நடத்தப் பட்டது. பொன்னேரி மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடியேற மக்கள் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியதால் அங்கு ரியல் எஸ்டேட் துறையும் ஏறுமுகம் காணத் தொடங்கியது.

இந்நிலையில், 2015-16ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ஸ்மார்ட் நகரங்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிடாதது பெரும் குழப்பத்தையும், ஆச்சரி யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னேற்றத்தை மட்டும் அவர் குறிப்பிட்டிருப்பது, ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் கைவிடப்பட்டதா அல்லது தள்ளி வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை மாநில அரசு களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் செயல்படுத்துவதற்கான தகுதியைப் பெற அந்தந்த நகரங்கள் தங்கள் வருவாயை அதிகரித்துக் காட்ட வேண்டும் என்று சமீபத்தில் கூறியிருந்ததும், மத்திய அரசு இத்திட்டத்தை தள்ளிப் போடுவதற் கான அறிகுறியாக பார்க்கப்பட்டது.

தமிழக அரசு கருத்து

இதுகுறித்து தமிழக நகர்ப்புற வளர்ச்சித் திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதா வது: இந்த திட்டம் ரத்து செய்யப்பட் டுவிட்டது என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது. அதேநேரத்தில் இது செயல்படுத்தப்படுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏனென் றால், கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப் பட்ட பிறகு, மாநில அரசுகளுடன் சில ஆலோசனைக் கூட்டம் மேற் கொள்ளப்பட்டதோடு சரி.

ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் இன் னும் வரைவுத் திட்டமாகத்தான் இருக் கிறது. திட்டத்துக்கான வழி வகைகள் முழுவதுமாக வகுக்கப் படவில்லை. எனவே, மத்திய அரசின் அடுத்த அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x