Published : 05 Mar 2015 09:51 AM
Last Updated : 05 Mar 2015 09:51 AM

நீதிபதிகள் நியமன விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை: தி.க. தலைவர் கி.வீரமணி தகவல்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கோரி திராவிடர் கழகம் சார்பில் நேற்று முன்தினம் பெரியார் திடலில் சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கி.வீரமணி பேசியதாவது:

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிப்பதில் தற்போது குறிப்பிட்ட சமூகத்தினருக்குதான் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கும் நீதிபதி நியமனத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

நீதிபதிகள் நியமனம் குறித்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளோம்.

இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி பேசும்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான விஷயத்தில் அனைத்து வழக்கறிஞர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

அரசியல் கட்சி வேறுபாடு இல்லாமல் இந்த விஷயத்தில் ஒன்றாக இருக்க வேண்டும்’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில் அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் கே.பாலு, பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வி.நளினி மற்றும் பல்வேறு கட்சிகளின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x