Published : 07 Mar 2015 03:08 PM
Last Updated : 07 Mar 2015 03:08 PM

அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமான அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் கோவையில் திமுக மகளிர் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டைப் பார்வையிட்ட ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

''வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து தெளிவான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, கைது செய்ய வேண்டும்.

அதிமுக ஆட்சி நடைபெறுகிறபோது இதுபோல பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. இதுபோன்று தொடர்கதைகள் அதிமுக ஆட்சியில் நடைபெறுகிறது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கி வைத்து ஒரு நாடகத்தை ஜெயலலிதா நடத்தி இருக்கிறார். நியாயமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, கைது செய்ய வேண்டும்.

அவர் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது என்னுடைய கருத்து மட்டும் அல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு இருக்கக்கூடிய ஒட்டுமொத்த நபர்களின் கருத்தும் கூட.'' என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x