Published : 10 Mar 2015 10:22 AM
Last Updated : 10 Mar 2015 10:22 AM

இரட்டை கொலை வழக்கில் 7 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை: மதுரை நீதிமன்றம் உத்தரவு

கடை அருகில் மதுபானம் குடித்ததை தட்டிக்கேட்ட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை ஊமச்சிக்குளம் உச்சபரம்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டவேலு (19). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது கடை அருகில் விஸ்வநாதன் என்பவர் சலவை கடை நடத்தி வந்தார்.

கடந்த 2011-ல் டீ கடை அருகில் பாலமுருகன் (22) உள்பட 8 பேர் மது குடித்துள்ளனர். இதனை மணிகண்டவேலும், விஸ்வநாதனும் கண்டித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த 8 பேரும் இருவரிடமும் தகராறு செய்து கத்தியால் குத்தியுள் ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக உச்சபரம்பமேடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (22), மணிகண்டன் (19), ராமு என்ற ராமச்சந்திரன் (27), மணி என்ற மணிகண்டன் (23), வடிவேல் (27), ரமேஷ் (27), சவுந்தர் என்ற சவுந்தரபாண்டியன் (25), வீரமணி (20) ஆகியோர் மீது ஊமச்சிக்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் வீரமணி இறந்துவிட்டார்.

இந்த வழக்கு மதுரை 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சி.ரமேஷ் வாதிட்டார்.

இரட்டை ஆயுள்

இந்நிலையில், இரட்டை கொலை வழக்கில் பால முருகன், மணிகண்டன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்ற 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி எஸ்.சீனிவாசன் நேற்று தீர்ப்பளித்தார். இரட்டை ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x