Published : 26 Mar 2015 12:16 PM
Last Updated : 26 Mar 2015 12:16 PM

கல்வி உரிமைச் சட்டம் எவ்வாறு செயல்படுகிறது?- வெள்ளை அறிக்கை கோருகிறார் ராமதாஸ்

மாநிலத்தில் கல்வி உரிமைச் சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை அளிக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழை எளிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பதை அறிய இந்தியா முழுவதும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன.

அகமதாபாத் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனமும், சென்ட்ரல் ஸ்கொயர் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ஆய்வில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் 12 (1) (சி) பிரிவின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் 25% மாணவர் சேர்க்கை இடங்கள் நலிவடைந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி 2013-14 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மொத்தம் 21.40 லட்சம் இடங்கள் நலிவடைந்த பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றில் 29% இடங்கள் மட்டுமே நிரப்பட்டதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் மொத்தம் 1.43 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்- ஆனால், இவற்றில் வெறும் 11% இடங்கள் மட்டுமே நலிவடைந்த பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்புள்ளி விவரங்கள் 2013-14 ஆம் ஆண்டிற்கானவை தான் என்ற போதிலும், கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து பின்னர் கடந்த 5 ஆண்டுகளாகவே இதே நிலை தான் நிலவுவதாக ஆய்வு தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். அதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு விவரங்கள் அமைந்துள்ளன. வேறு சில புள்ளிவிவரங்களும் தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்கின்றன.

2013-14 ஆம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி இரு கட்டங்களாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாகவும், அதற்குப் பிறகும் வெறும் 31 % இடங்கள் மட்டுமே நிரப்பட்டதாகவும் தமிழக அரசின் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்திருக்கிறார். நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி ஒதுக்கப்பட்ட 89,941 இடங்கள் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கான கல்விக் கட்டணமாக ரூ.26.13 கோடி நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணியும், செயலாளர் சபீதாவும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

ஆனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்களில் மொத்தம் 2,959 மாணவ, மாணவியர் மட்டும் தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கல்வி உரிமை சட்டப்படியான மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

கல்வி பெறும் உரிமைச்சட்ட விதிகள் தெளிவாக இல்லாமை, நலிவடைந்த மாணவர்களைச் சேர்க்க தனியார் பள்ளி நிர்வாகங்கள் மறுப்பது, மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசிடமிருந்து பெறுவதில் தாமதம் ஏற்படுவது, இந்த சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமை, இந்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஆகியவற்றின் காரணமாகத் தான் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் ஆய்வில் தெரிவந்துள்ளது. இவை உண்மையானவை தான் என்பதை தமிழகத்தின் அனுபவங்களில் இருந்தே உணர முடிகிறது. அதேநேரத்தில் கல்வி உரிமைச் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமே பணக்கார மாணவர்களை கொண்டு தனியார் பள்ளிகள் நிரப்பி விடுகின்றன என்பதையும், அவர்களிடம் பெருமளவில் பணம் வசூலித்துக் கொண்டு அவர்கள் அனைவரையும் நலிவடைந்த பிரிவினராக கணக்கில் காட்டி மக்களை ஏமாற்றுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வி உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத் தான் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த சட்டம் மீறப்படுவது தெளிவாகத் தெரியும் போதிலும், அதற்குக் காரணமான தனியார் பள்ளிகள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வி பெறும் உரிமைச் சட்டம் தமிழகத்தில் இதுவரை எவ்வாறு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, வரும் கல்வியாண்டில் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x