Published : 20 Mar 2015 03:21 PM
Last Updated : 20 Mar 2015 03:21 PM

தமிழக முதல்வர் ஜெயலலிதாவா? பன்னீர்செல்வமா?- கருணாநிதி கேள்வி

'தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் ஜெயாவா? பன்னீரா? என்ற இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளிக்கிறார்கள்' என்று திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.

மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி கருணாநிதி பேசியது:

''இன்று சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு அருகிலே மாத்திரமல்ல; தமிழ்நாடு முழுவதும் பல நூறு இடங்களில், திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்த இது போன்ற கூட்டங்கள் - ஆயிரக்கணக்கிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டங்களின் எதிரொலி ஏதோ கூடினோம், கலைந்தோம் என்ற நிலைமையிலே முடிவடைய வேண்டும் என்பதல்ல; கூடினோம், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்தை எச்சரித்தோம், எச்சரிக்கைக்குப் பிறகும் அவர்கள், பாடம் பெறாத காரணத்தால் இந்த அரசைத் தமிழ்நாட்டு மக்கள், இந்திய நாட்டு மக்கள், எங்கெல்லாம் ஜனநாயகத்திற்கு மதிப்பு அளிக்கின்ற மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தங்களுடைய ஆற்றலைக் காட்டி அரசாங்கங்களின் அகம்பாவத்தை வீழ்த்துகின்ற அந்தப் பணியை முடித்தோம் என்ற அளவுக்கு இந்தக் கூட்டங்கள் பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

ஜார் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் யாருக்கும் அஞ்ச மாட்டேன், யாரையும் மதிக்க மாட்டேன் என்று தானும், தன்னுடைய மனைவியும் பதுங்கியிருந்த அரண்மனைக்குள்ளேயே இருந்து மிரட்டல் விடுத்தான். அவனையும், அவனைச் சார்ந்தோரையும், அவனுடைய துணைவியார் உட்பட குடும்பத்தாரையும் வேரோடு களையெடுத்து, அந்த நாட்டை சுதந்திர பூமியாக ஆக்கி, சமத்துவபுரியாக ஆக்கி விடுவித்த அந்தப் பெரும் கைங்கரியத்தை, அந்த நாட்டிலே உள்ள சாதாரண சாமானிய ஏழையெளிய மக்கள் தான் செய்து முடித்தார்கள்.

அதே நிலை எந்த ஒரு அரசுக்கும் வரக் கூடாது என்று நாம் எண்ணுகிற காரணத்தால்தான் கூட்டங்களிலே விளக்க உரைகளோடு நம்முடைய தோழர்கள் காட்டுகின்ற ஆர்வத்தோடு அரசுகளுக்கு எச்சரிக்கைகளைச் செய்கிறோம். அதைப் பொருட்படுத்தா விட்டால், ஜாரின் கதி, ரஸ்புடீனின் கதி இவர்களுக்கும் ஏற்படும் என்பதை இந்த நேரத்திலே நான் வெளிப்படுத்தி, திராவிட முன்னேற்றக் கழகம் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா கட்சிகளும், இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளும், நடைபெறுகின்ற அக்கிரமத்தை, அராஜகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பாடம் போதிக்க வேண்டுமென்று புஜம் தட்டி நிற்கிற காட்சியை இன்றையதினம் நாடு காணுகிறது. அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மத்திய அரசு நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வருகிறது. கையகப்படுத்தும் நிலங்களை யாருக்குத் தரப் போகிறோம், ஏழையெளியவர்களுக்குத் தானே தரப் போகிறோம் என்று ஒரு சிலர் பேசி, எழுதி வருகிறார்கள். நான் அவர்களை யெல்லாம் கேட்க விரும்புகிறேன், நீங்கள் பேசுவதும், எழுதுவதும் உண்மை என்றால், எதற்காக இன்றையதினம் மத்திய அரசினுடைய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தச் சொல்லி நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் அதே நேரத்தில், தமிழகத்திலே உள்ள ஒரு அதிகாரியை மிரட்டி, அந்த அதிகாரியான முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்குக் காரணமாக ஆகி இப்படியெல்லாம் வேதனைப்படுத்துகிறீர்கள் என்ற இந்தக் கேள்வியைத் தான் தமிழக அரசுக்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.

மத்திய அரசில், பாஜக அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை இந்தியாவிலே உள்ள எல்லா எதிர்க் கட்சிகளும் எதிர்க்கின்றன. அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்களும் எதிர்க்கின்றார்கள். பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமார், இந்தச் சட்டத்திற்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் இதை நான் அமல்படுத்தவே மாட்டேன் என்று உறுதி கூறியிருக்கிறார். சோனியா காந்தி தலைமையில் திமுக உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கட்சிகள் டெல்லியில் பேரணியாகச் சென்று குடியரசு தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை, நிதீஷ் குமார் போன்ற முதலமைச்சர்களின் நியாயமான வாதங்களைப் புறந்தள்ளி விட்டு நிறைவேற்றத் தேவையா என்பதை மத்திய அரசும், அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக உள்ள நம்முடைய மாநில அரசும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையிலே முதலமைச்சர் ஜெயாவா? பன்னீரா? என்ற இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் உறுதி அளிக்கிறார்கள். இந்தச் சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று! எப்படி ஆதரிக்கிறார்கள் தெரியுமா? அவர்களுடைய ஆதரவுக்கு என்ன காரணம் தெரியுமா? நாங்கள் இந்தச் சட்டத்தை - இது ஏழையெளிய மக்களை வாட்டுவதாக இருந்தாலும் - குடியானவர்களை, விவசாயிகளை வேதனைப்படுத்துகின்ற சட்டமாக இருந்தாலும் - நாங்கள் இந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்கு அளிக்கிறோம் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா?

"நாங்கள் வாக்களித்தால் தான், இந்தச் சட்டத்தை ஆதரித்தால் தான் எங்களுடைய கோடிக்கணக்கான ரூபாய் ஊழலை மறந்து விட்டு - அதனை மறைத்து விட்டு - எங்களை நீங்கள் விடுவிக்க முடியும் - எங்களை விடுவிப்பதாக இருந்தால், இந்தச் சட்டத்தை, மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம், வாக்களிக்கிறோம்" என்று ஜெயலலிதா கூறுகிறார் என்றால், அவர்கள் பேசுகின்ற நா, அதாவது நாக்கு ஒன்றா? இரண்டா?

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு எந்தச் சட்டத்தை - ஜெயலலிதாவின் கும்பல் எதிர்த்ததோ, அதே சட்டத்தை இன்றைக்கு ஆதரித்து வாக்களிக்க வரிந்து கட்டிக் கொண்டு புறப்படுகிறது என்றால், இது தங்களுடைய தனிப்பட்ட சுய இலாபத்திற்காகத் தான் என்பதை எந்த மக்களும், அதுவும் அறிவுள்ள எந்த மக்களும் மறுக்க முடியாது, மறக்க முடியாது.

ஆகவே நாட்டில் இன்றைக்கு நடைபெறுகின்ற அநியாயங்கள் ஒரு புறம் இருந்தாலுங்கூட, பொழுது விடிந்து பொழுது போனால் ஊருக்கு ஒரு கொலை, தெருவுக்கு ஒரு கொள்ளை என்ற நிலை நாட்டிலே உள்ளது.

ஆனால் நியாயத்திற்காகப் போராடும் வீரர்கள் நூற்றுக்கணக்கிலே கைது என்ற நிலைமையிலே அராஜக ஆட்சியை நடத்துகின்றவர்களுக்கு வேண்டுமானால் இந்த நிலையைத் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் அராஜகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தமிழ்நாட்டிலே உள்ள தமிழன் மாத்திரமல்ல, இந்தியாவிலே உள்ள இந்தியன் ஒவ்வொருவரும் இன்றைக்கு முடிவு கட்டிக் கொண்டு புறப்படுவார்களேயானால், என்ன தான் துப்பாக்கிகள் மாத்திரமல்ல, பீரங்கிகளைப் பயன்படுத்தினாலும்கூட, எழுச்சியுற்ற இந்த மக்களை யாராலும் அடக்க முடியாது. எவராலும் அடக்க முடியாது. எத்தனை சிறைச்சாலைகள் உண்டோ, அத்தனை சிறைச்சாலைகளையும் திறந்து வையுங்கள். சிறைக்குச் செல்வதற்கு, சிறைகளை நிரப்புகின்ற போராட்டத்திற்கு, தமிழன் தயாராகிவிட்டான்.

இந்தியாவிலே உள்ள ஏழையெளிய மக்கள் தயாராகி விட்டார்கள். யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறாய்? எவரைக் கைது செய்து புரட்சியை அடக்கலாம் என்று கருதுகிறாய்? புரட்சி ஒரு நாளும் தோற்றதில்லை. புரட்சி தோற்பதாக இருந்தால், ரஷ்யாவிலே தோற்றிருக்கும். புரட்சிதோற்பதாக இருந்தால், பிரெஞ்சு நாட்டிலே தோற்றிருக்கும். எந்த நாட்டிலும் தோற்காத புரட்சி இன்றைக்கு தமிழ்நாட்டிலே மட்டுமல்ல, தமிழ்நாடு தழுவிஅடுத்து இந்தியா முழுவதும் பரவுகின்ற அந்தப் புரட்சி மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிற கொடூர, வஞ்சக எண்ணம் படைத்த கொடுமையாளர்களை எதிர்க்கின்ற புரட்சி, அந்தப் புரட்சியை அடக்கிவிடலாம் என்று எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும், எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், எந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும், அவைகளுக்கெல்லாம் அடங்கிப் போகாது இந்த எழுச்சி என்பதை நான் அவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொண்டு, பழைய வரலாறுகளைப் படித்துப் பாருங்கள்! நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் ஏடுகளிலே கண்டு சிந்தித்துப் பாருங்கள்!

அந்தச் சிந்தனைகளுக்குப் பிறகு, இந்த நடமாட்டங்களுக்குப் பிறகு நாடு எங்கே போகிறது? எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது? இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் என்ன ஆகும் என்பதை யெல்லாம் தயவுசெய்து ஆட்சியாளர்களே, நாம் ஆளுவது உறுதி, இன்றைக்கு நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றவர்களே, தயவு செய்து பழைய வரலாறுகளைப் படித்துப் பாருங்கள்! பழைய சரித்திரங்கள் கூறுகின்ற பாடம் என்ன என்பதை எண்ணிப் பாருங்கள்!

எனவே அந்தப் பாடங்களைப் படித்த பிறகாவது, அந்த அனுபவங்களை உணர்ந்து பார்த்த பிறகாவது, இனியும் தொடர்ந்து மக்களை வாட்டுவோம் என்று எண்ணாமல், புத்தி புகட்டப்பட்ட நிலைக்கு வாருங்கள்! அமைதியாக ஆட்சி நடத்த முடிந்தால், அதற்கு முன் வாருங்கள், முடியாவிட்டால், எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று சொல்லிவிட்டு ஓடிவிடுங்கள் என்று ஆணவம் பிடித்த ஆட்சியாளர்களுக்கு, தூங்கு மூஞ்சி ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை செய்து நாம் இந்த மக்கள் கடலுக்கு முன்னால் சபதம் எடுத்துக்கொண்டு விடைபெறுகிறேன்'' என்று கருணாநிதி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x