Published : 23 Mar 2015 11:10 AM
Last Updated : 23 Mar 2015 11:10 AM
மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 28-ம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 2 தடுப்பணை களை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் தடுப்பணைகள் கட்ட ரூ.25 கோடி கர்நாடக அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன்பே கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்து வருகிறது. மத்திய பாஜக அரசும் இதை தடுக்காமல் உள்ளது.
கர்நாடக அரசின் இந்த போக்கை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் வரும் 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இந்த முழு அடைப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தன்னுடைய ஆதரவை தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT