Published : 13 Mar 2015 08:40 AM
Last Updated : 13 Mar 2015 08:40 AM

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள்: சகாயத்துக்கு மேலும் 2 மாதம் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக நியமிக்கப்பட்ட சட்ட ஆணையர் சகாயத் துக்கு மேலும் 2 மாதங்கள் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் குவாரிகள் முறைகேடு குறித்து விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து கடந்தாண்டு நவ. 25-ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆய்வறிக்கையை 2015, மார்ச் 12-ம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, சகாயம் தனது முதல் நிலவர ஆய்வறிக்கையை நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், கடந்தாண்டு டிச. 3-ம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் 7-ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வுகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க மேலும் ஒரு மாதம் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அதில் சகாயம் கோரியிருந்தார்.

உயர் நீதிமன்ற முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகள் ஆய்வுப் பணியை முழுமையாக முடிக்க மேலும் ஒரு மாதம் காலஅவகாசம் வேண்டும் என்று சகாயம் கோரியுள்ளார். கிரானைட் குவாரிகள் தொடர்பாக மதுரை கோட்டாட்சியர், மதுரை மாவட்ட மண்ணியல் மற்றும் கனிம வளத் துறை உதவி இயக்குநர் ஆகியோருக்கு விரிவான கேள்விப் பட்டியல் அனுப்பியிருப்பதாக அவர் இன்று தாக்கல் செய்த முதல் நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி வாதிடுகை யில், மேற்கண்ட இரண்டு துறை களைப் பொறுத்தவரை கேள்விப் பட்டியலுக்கான பதில் 15 நாட்களுக்குள் அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதர துறைகள் மற்றும் வங்கிகள் 15 நாட்களுக்குள் கேள்விப் பட்டியலுக்கு பதில் அளித்து சட்ட ஆணையருக்கு அனுப்ப வேண்டும். கிரானைட் குவாரிகளை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சட்ட ஆணையருக்கு கூடுதலாக 2 மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

கிரானைட் குவாரிகள் ஆய்வுப் பணியில் பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் உதவி, சட்ட ஆணையருக்கு தேவைப்படுகிறது என்று அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரினார். ஓய்வு பெற்ற அதிகாரிகளின் உதவியை சட்ட ஆணையர் பெற்றுக் கொள்ளலாம். தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகளின் உதவியைப் பெறு வதற்கு பொதுவான உத்தரவு பிறப்பிக்க முடியாது. தனக்கு எந்தெந்த அதிகாரிகளின் உதவி தேவைப்படுகிறது என்று அரசுக்கு சட்ட ஆணையர் தெரியப்படுத்த வேண்டும். அதுகுறித்து ஒரு வாரத்துக்குள் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வுப் பணியின்போது எதிர்பாராத செலவினங்களுக்காக ரூ.3 லட்சம் கேட்டுள்ளார். அதனை வழங்க வேண்டும்.

இவ்வழக்கில் தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த டிசம்பரில் உத்தரவிட்டோம்.

மேலும், இரண்டு வாரம் அவகாசம் கேட்டுள்ளனர். 2 வாரத்துக்குள் மத்திய அரசு நிலையைத் தெரிவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும். வழக்கு விசாரணை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x