Published : 26 Mar 2015 09:35 AM
Last Updated : 26 Mar 2015 09:35 AM
நாகை மாவட்டம் வேதாரண்யம் பெண் நீதிபதியை தாக்கியது தொடர்பாக வழக்கறிஞர் உட்பட 4 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம் நீதிபதி லதா கடந்த 18-ம் தேதி இரவு காரில் சென்றபோது, வேளாங்கண்ணி அருகே 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது. இது தொடர்பாக நாகை மாவட்ட போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், வேதாரண்யம் அருகேயுள்ள நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(40), அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராமலிங்கம்(25), கீழ்வேளுர் மஞ்சவாடி இங்கர்சால்(22), சத்யராஜ்(29) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைதுசெய்தனர்.
நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி முன்னிலையில் நேற்று காலை ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும், வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ஹரிகிருஷ்ணன், இங்கர்சால், சத்யராஜ் ஆகியோர் திருச்சி மத்திய சிறையிலும், ராமலிங்கம் நாகை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர் பாக கீழ்வேளுர் மஞ்சக்கொல்லை யைச் சேர்ந்த டேவிட்(எ) சதீஷிடம்(22) போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
காரணம் என்ன?
வேதாரண்யம் நீதிமன்றத்தில் தான் ஆஜராகும் வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு நீதிபதி லதா ஜாமீன் வழங்குவதில்லை. மேலும், தீர்ப்பு வழங்குவதிலும் காலதாமதம் செய்கிறார் என்று நீதிபதி லதா மீது வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன் வேதாரண்யம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக் கறிஞர்கள் சங்கத்தினர் நீதிபதி லதாவிடம் தெரிவித்துள்ளனர். எந்த வழக்கிலும், யார் மீதும் தான் பாரபட்சம் காட்டுவதில்லை என நீதிபதி கூறியுள்ளார். எனினும், வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சமாதானம் ஆகாமல், சங்கத்தை விட்டே விலகிக்கொள்வதாக கடிதம் கொடுத்துள்ளார். மேலும், நீதிபதி லதா மீது புகார் தெரிவித்து, உயர் நீதி மன்றப் பதிவாளருக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தனது நண்பர் களுடன் சேர்ந்து நீதிபதி லதா மீது வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தாக்குதல் நடத்தியுள்ளாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT