Published : 16 Mar 2015 10:30 AM
Last Updated : 16 Mar 2015 10:30 AM

காவிரியில் அணை கட்டும் விவகாரம்: முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமரை சந்தித்து தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்றார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

தஞ்சாவூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தின் தற்போதைய மிக முக்கிய பிரச்சினை மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவது. இதற்காக கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் டெல்லிக்குச் சென்று பிரதமரை சந்திக்கின்றனர். ஆனால், தமிழக அரசு மிக மெத்தனமாக இருக்கிறது.

தமிழக அரசு அரசியல் பார்க் காமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தி, முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து அணை கட்டுவதை தடுக்க தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, வேலைவாய்ப்பு ஆகிய 4 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம். எங்கள் ஆட்சியில் ஒரு சொட்டு சாராயம்கூட தமிழகத்தில் இருக்காது.

அதிகம் ஊழல் செய்கின்ற அரசாக அதிமுக ஆட்சி உள்ளது. இதனால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டது. முதல்வர், அமைச்சர்கள் கோட்டையில் இல்லை. கோயில்களில் யாகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

காவிரி, மீத்தேன் போன்ற மக்களை பாதிக்கும், தமிழகத்தின் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை. தமிழகத்தின் மின் உற்பத்தி பாதிப்புக்கு 2 ஆட்சிகளும் காரணம். செயற்கை முறையில் பற்றாக்குறையை ஏற்படுத்தி, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி ஊழல் செய்கின்றனர்.

தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. தமிழக அரசுக்கு ரூ.4.16 லட்சம் கோடி கடன் உள்ளது. தற்போதைய அதிமுக ஆட்சியில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பில் பெரிய முன் னேற்றம் ஏற்படவில்லை என்றார் அன்புமணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x