Published : 19 Mar 2015 12:55 PM
Last Updated : 19 Mar 2015 12:55 PM

விவசாயிகளுக்கு ஆதரவு: தஞ்சையில் வைகோ தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும் மீத்தேன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஏப்ரல் 7-ம் தேதி தஞ்சையில் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோ தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், "உச்ச நீதிமன்ற ஆணையின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் முற்றாக உதாசீனம் செய்து விட்டு, கர்நாடக அரசு காவிரிக்குக் குறுக்கே மேகதாட்டு, ராசிமணலில் இரண்டு புதிய அணைகளைக் கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் படுவேகமாகச் செய்து வருகிறது. இதில் மேகதாட்டூவில் மட்டும் 48 டி.எம்.சி. தண்ணீர் தேக்க முடியும். மைசூர் பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக என்று பொய்யுரைக்கும் கர்நாடக அரசு, நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக 11 இலட்சம் ஏக்கரில் பாசனத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டு உள்ளது.

இந்த இரண்டு அணைகளும் கட்டப்பட்டு விட்டால், அதன்பிறகு மேட்டூருக்குத் தண்ணீர் வர வாய்ப்பே இருக்காது. பெருமழை காலத்தில் வெள்ளப்பெருக்கால் வரும் உபரி நீர் கூட மேட்டூருக்குக் கிடைக்காது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், நாம் கற்பனை செய்ய முடியாத துன்பமும், அழிவும், தமிழகத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்களைத் தாக்கும். தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்கள் குடிதண்ணீரும் பாசன நீரும் இன்றிப் பரிதவிக்கும். 5 கோடி மக்களுக்குக் குடிநீர் இன்றி, மூன்று கோடி விவசாயிகளுக்குப் பாசன நீர் இன்றிப் போகின்ற உத்பாதம் நிகழும்.

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்குப் பச்சைத் துரோகம் இழைக்கும் நரேந்திர மோடி அரசுக்குக் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கவும், தஞ்சை சிவகங்கை மாவட்டங்களைப் பாழாக்க முனையும் மீத்தேன் நாசகாரத் திட்டத்தை விரட்டவும், நிலங்களைக் கையகப்படுத்த முனையும் மத்திய அரசின் அநீதியான மசோதாவை எதிர்க்கவும், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை மாநகரில் மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறும்.

கடந்த இரண்டு அறப்போர்களிலும் பங்கேற்ற அமைப்புகளும், விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் இந்த மனிதச் சங்கிலியில் கை கோர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x