Published : 07 Mar 2015 10:04 AM
Last Updated : 07 Mar 2015 10:04 AM
சென்னை குடிநீர் வாரியம் நடப்பாண்டில் நுகர்வோர்களிடம் இருந்து ரூ.344.85 கோடி வரி வசூல் செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
சென்னை குடிநீர் வாரியம் சார்பாக சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களிடம் இருந்து நிலுவைத் தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. நுகர்வோர்கள் இதைச் செலுத்த வசதியாக அடுக்குமாடி குடியிருப்புகள், குடிசைkf பகுதிகள், கோயம்பேடு வணிக வளாகம் போன்ற பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நிலுவைத் தொகை செலுத்த தவறிய நுகர்வோர்கள் மீது குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல், சீல் வைத்தல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை குடிநீர் வாரியம் நடப்பாண்டில் மார்ச் மாதம் 5-ம் தேதி வரை ரூ.344.85 கோடி வசூல் செய்துள்ளது. இந்த தொகை கடந்த ஆண்டு வசூலான 313.10 கோடியை விட, ரூ.31.75 கோடி அதிகமாகும். கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் ரூ.46 கோடி வசூல் செய்துள்ளது.
2014-15 இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வரியை செலுத்த இறுதிநாள் 31.3.2015 ஆகும். எனவே நுகர்வோர்கள் தங்களின் வரி மற்றும் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தி, மேல் வரி மற்றும் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நுகர்வோர்களின் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை குடிநீர் வாரியம் வரும் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிவரை சிறப்பு வரி வசூல் மையங்களை நடத்துகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT