Published : 21 Mar 2015 05:54 PM
Last Updated : 21 Mar 2015 05:54 PM
புதுச்சேரி சட்டப்பேரவை மீண்டும் மார்ச் 25ல் கூடுகிறது. அன்றைய தினம் இடைக்கால பட்ஜெட் தாக்கலாக உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை முழு பட்ஜெட் தாக்கலாகவில்லை. இதுவரை இடைக்கால பட்ஜெட்தான் முதல்வர் ரங்கசாமியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்முறை முழு பட்ஜெட் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கியது இரு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்து ஒத்தி வைக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு நடப்பாண்டு பட்ஜெட்டுக்கு ரூ. 2800 கோடி நிதி கேட்டு அனுமதி தராமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதால் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை உடனே தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பட்ஜெட் தேதியை அறிவிக்க முடியவில்லை.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தார். ஆனால், பட்ஜெட் நிதிக்கு முழுமையாக மத்திய அரசு அனுமதி தராமல் காலம் தாழ்த்துகிறது. இதனால் முழு பட்ஜெட் தாக்கலாவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை செயலர் மோகன்தாஸ் இன்று வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரி சட்டப்பேரவை வரும் மார்ச் 25ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு தரப்பில் கேட்டதற்கு, மத்திய அரசு ரூ. 2800 கோடிக்கு ஒப்புதல் தரவில்லை. இடைக்கால பட்ஜெட்தான் இந்த ஆண்டும் தாக்கலாக உள்ளது. வரும் 25ம் தேதியே இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார். ஏனெனில் அடுத்த ஆண்டும் தேர்தலையொட்டி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் வேண்டிய நிலையுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT