Published : 31 Mar 2015 07:23 PM
Last Updated : 31 Mar 2015 07:23 PM

ராணிப்பேட்டை கழிவுநீர் தொட்டி விவகாரம்: மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் கைது

ராணிப்பேட்டை சிப்காட் தோல் கழிவுநீர் தொட்டி உடைந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் இருவரை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்குள்ள தோல் கழிவுத் தொட்டி கடந்த ஜனவரி 31-ம் தேதி நள்ளிரவு உடைந்தது. இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சிட்கோ பொது சுத்திகரிப்பு நிலைய பொது மேலாளர் அமிர்தகடேசன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கழிவுத் தொட்டி உடைந்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் காமராஜ் மற்றும் உதவிப் பொறியாளர் முரளிதரன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். இருவரும் ஜெ.எம்.2-வது நீதிமன்ற நீதிபதி ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘உடைந்த கழிவுத் தொட்டி கட்டுமானப் பணி, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களுக்கு தெரிந்தே நடந்துள்ளது. விதிகளை மீறி அந்த தொட்டியைக் கட்டியதும் இவர்களுக்குத் தெரியும்.

இவர்கள் மாதந்தோறும் ஆய்வுக்கு சென்றபோது தொட்டி கட்டுமானப் பணியை பார்த்துள்ளனர். சிட்கோ நிர்வாகிகளிடம் மாதந்தோறும் லஞ்சம் பெற்றுள்ளனர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்துகொண்டது, இதற்காக மாதந்தோறும் லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசுப் பணி செய்யாமல் இருந்தது உள்ளிட்ட பிரிவின்கீழ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x