Published : 04 Apr 2014 10:40 AM
Last Updated : 04 Apr 2014 10:40 AM

நாட்டை தமிழர் ஆளும் வாய்ப்பை எட்டி உதைத்து விட்டனர்: தா.பாண்டியன்

“நாட்டை தமிழர் ஆளும் வாய்ப்பை எட்டி உதைத்து விட்டார்கள்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.மோகன்ராஜ் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, உடன் வந்த தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா, 9 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அனைத்து இடங்களிலும் மகத்தான வரவேற்பு உள்ளது. வகுப்பு வாதத்தை முறியடிக்க இணைந்து போராடி வருகிறோம்.

காங்கிரஸ் கட்சி தன் நம்பிக் கையையும், மக்கள் நம்பிக்கை யையும் இழந்துவிட்டது. அந்த இடத்தை நிரப்பி, ஆட்சி சாவியை பறிக்க கோட்சே பாரம்பரியத்தினர் துடிக்கின்றனர். தமிழகத்தில் மோடி அலை எதுவும் வீசவில்லை. பதவிக்காக அவர் அலைவது தெரிகிறது. அவர்கள் ஒரு இடத்தில்கூட வெற்றிப் பெறக்கூடாது என முழுக்கவனத்தோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் வேலை செய்து வருகின்றன.

தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, தென்னக நதிகளை, குறிப்பாக அந்தந்த மாநிலங்களில் ஓடும் நதிகளை இணைத்து, ஏரி, குளங்களை செம்மைப்படுத்த வேண்டும் என்பதை முதல் கட்ட திட்டமாக மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்துவோம். எல்லாவற்றையும்விட ஜனநாய கத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்து, நாட்டை சின்னாபின்னமாக்கும் வகுப்புவாதத்தை தடுப்பதுதான் எங்கள் முதல் வேலை.

தமிழர் நலனை பேசி வரும் சில கட்சியினர் தமிழருக்கும், தமிழகத்துக்கும் எதிராக வகுப்பு வாத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வந்த வழியை மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நாட்டு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

தமிழருக்கு வாய்ப்பு

இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்கும், நாட்டை ஆளும் வாய்ப்பு ஒரு தமிழருக்கு கிடைத்தது. அதனை எட்டி உதைத்துவிட்டனர். தேர்தல் முடிவு வரும்போது அவர்களுக்கு இது தெரியும். 40 தொகுதி என்ன, 400 தொகுதிகளில் ஜெயிப்போம் என்றுகூட கூறலாம். ஆனால், மே 16-ம் தேதி தேர்தல் ஆணையம்தான் இதனைச் சொல்லும். மக்களோடு இருந்து அவர்களுக்காகப் போராடி வருகிறோம். இதன் ஒரு பகுதிதான் இந்த தேர்தல் பணியும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x