Published : 21 Feb 2015 10:30 AM
Last Updated : 21 Feb 2015 10:30 AM
முல்லை பெரியாறு அணைக்கு மத்தியப் படையின் பாதுகாப்பு கேட்டு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணையின் நிர்வாகத்தை தமிழகமும், பாதுகாப்பை கேரளமும் கவனித்து வருகின்றன. கேரள அரசு பாதுகாப்பு வழங்குவதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணைக்குள் நுழையும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்ததால், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இம்மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இம்மனு குறித்து மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, ‘முல்லைப் பெரியாறு அணையில் மொத்தமுள்ள 13 மதகுகளில் 12 மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. எனவே, அனைத்து மதகுகளும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட வேண்டும். என்று கோரி கேரளம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT