Published : 18 Feb 2015 03:28 PM
Last Updated : 18 Feb 2015 03:28 PM

கத்தியைக் காட்டி மிரட்டி இரு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: பரோட்டா மாஸ்டரை தேடும் கோவை போலீஸ்

கத்தியைக் காட்டி மிரட்டி பள்ளிச் சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் சம்பந்தப்பட்ட பரோட்டா மாஸ்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பழனி (55). இவர், துடியலூர் இடையர்பாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

இதே பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த முத்துப்பழனி, அருகாமை வீட்டைச் சேர்ந்த 10 மற்றும் 14 வயது சிறுமிகளை கடந்த 14-ம் தேதி பகலில் பால் பாக்கெட் வாங்கி வந்து தருமாறுக் கூறி தனது வீட்டுக்கு கூட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர், அந்தச் சிறுமிகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் பாதிக்கப்பட்டு திரும்பிய சிறுமிகள், அச்சத்தில் இருந்ததை பார்த்து கட்டிட வேலைக்குச் செல்லும் இரு சிறுமிகளின் பெற்றோரும் விசாரித்ததில் நடந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோர் நேற்று காலை புகார் அளித்தனர். இதன்பேரில், முத்துப்பழனி மீது குழந்தைகள் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம், கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட சிறுமிகள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தலைமறைவாகியுள்ள முத்துப்பழனியை போலீஸார் தேடி வருகின்றனர். சிறுமிகள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் முறையே 4 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x