Published : 08 Feb 2015 03:19 PM
Last Updated : 08 Feb 2015 03:19 PM
சங்கரன்கோவில் அருகே கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஒன்றிய அலுவலக பிரதான வாயில் அருகே அட்டைப் பெட்டி ஒன்று கிடந்தது. செல்லோ டேப்பால் பெட்டி ஒட்டப்பட்டிருந்தது. அலுவலக காவலாளி குமரேசன் அருகில் சென்று பார்த்த போது, ‘துணிவிருந்தால் திறந்து பார்’ என்று, பெட்டியின் மீது எழுதப்பட்டிருந்தது.
இதனால் பெட்டிக்குள் வெடிகுண்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. பனவடலிசத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளர் சுந்தரநேசன் மற்றும் போலீஸார் அங்குவந்தனர். பெட்டி கனமாக இருந்ததால் போலீஸாரும் உடனே அதை அகற்ற முற்படவில்லை. திருநெல்வேலி வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேரம் செல்ல செல்ல மக்களிடையே பீதி அதிகரித்ததை அடுத்து போலீஸார் அந்த அட்டை பெட்டி மீது தண்ணீரை ஊற்றி அதை உடைத்தனர். உள்ளே பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த பெட்டிக்குள் சிவப்பு மையால் எழுதப்பட்ட 2 பக்க கடிதம் ஒன்று இருந்தது. திருமலாபுரத்தில் பசுமை திட்டத்தில் வீடு ஒதுக்கியதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. பசுமை வீடு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர் யாராவது இவ்வாறு செய்திருக்கலாம் என்று, போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT