

டெல்லி தேர்தல் முடிவுகள் இந்திய மக்களின் பொதுவான அபிப்ராயத்தை வெளியிடுவதாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கேஜ்ரிவால் தலைமையில் பெற்றுள்ள வெற்றி வகுப்புவாத, பிளவு சக்திகளுக்கு எதிராக பலமொழிகள் பேசும் மக்களைக் கொண்ட டெல்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு. ஒரு வகையில் இந்தியப் பெருமக்களின் பொதுவான அபிப்ராயத்தை வெளியிடுவதாக அமைந்துள்ளது.
ஆளும் கட்சியான பா.ஜ.க தனது முழு அதிகார பலத்தையும், பிரச்சார பலத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தியும் பரிதாபமான தோல்வியை தலைநகரிலேயே பெற்றிருப்பது தலையில் விழுந்த அடிக்குச் சமமாகும்.
வகுப்புவாத அபாயம் தலைதூக்கிய நேரத்தில் டில்லி மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.
மிகச் சரியான தீர்ப்பை வழங்கிய டில்லி மக்களுக்கும் அதை உறுதிப்படுத்திய ஆம் ஆத்மி கட்சிக்கும் அதன் தலைவர் அரவிந்த கேஜ்ரிவாலுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளார்களுக்கு இடதுசாரி கட்சிகள் போட்டியிடாத இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தந்தது என்பதையும் தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.