Published : 02 Feb 2015 10:11 AM
Last Updated : 02 Feb 2015 10:11 AM

நீர் நிலப் பகுதிகள் மறைந்து வருவதால் கண்டம் விட்டு கண்டம் பெயரும் வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைவு

இயற்கை மனிதனுக்கு வாழ்வளிக்கிறது. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறது. இதனை மிகத்தெளிவாக உணர்ந்ததால்தான், பண்டைய காலத் தமிழர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். இயற்கையை அவர் கள் நேசித்தார்கள்.

மரங்களை வெட்டாததால் வானம் மும்மாரி பொழிந்து மண்ணில் ஈரம் மிகுந்து விளைச்சல் இருந்தது. மகசூல் அதிகரித்தது.

இன்று நகரமயமாக்கலால் வனங்கள், ஓடைகள், கால்வாய்கள் மாயமாகி நீர் நிலப்பகுதிகள் அழிக்கப்படுவதால் மண்ணில் ஈரமில்லை. விளைச்சல் இல்லை. மகசூல் கிடைக்கவில்லை. அரிய வகை பறவைகள், வன உயிரினங்கள் மாயமாகி வருகின்றன.

மழை பெய்தாலும் நிலத்தடி நீர்மட்டம் உயராமல், தண்ணீர் பற்றாக்குறை நிரந்தர பிரச்சினையாகி விட்டது. அதனால், உலகின் நீர் ஆதாரம், உயிரினங்களுக்கு அடிப்படையான நீர் நிலப் பகுதிகளை பாதுகாக்க கடந்த 1997-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா உட்பட 160 நாடுகளில் பிப்ரவரி 2-ம் தேதி உலக நீர், நிலம் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நீர் நிலப் பகுதிகளை பாதுகாப்பது, இந்த தினத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

பறவைகள், வனவிலங்குகள் புகலிடம்

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், கொடைக்கானல் மாவட்ட வன அலுவலருமான வெங்கடேஷ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர், அசம்பு பகுதி, நீர் பிடிப்பு புல்வெளிகள், சதுப்பு நிலம், ஆறுகளின் முகத்துவாரங்கள், கடற்கரை சமவெளிகள், கடல்நீர் மற்றும் நன்னீர் இணையும் பகுதிகள் போன்றவை நீர், நிலப் பகுதிகளாகும். நீர், நிலப்பகுதி பறவைகள், மிகவும் அரிதான தாவரங்கள், வன விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. முக்கியமாக கண்டம் விட்டு கண்டம் பெயரும் வெளிநாட்டு வாழ் பறவைகளுக்கு, நீர் பிடிப்பு நிலங்கள் முக்கிய வாழ்விடமாகும்.

கடந்த காலத்தில், தமிழகத்தில் நீர், நிலப் பகுதிகள் அதிகளவு காணப்பட்டதால், வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவு வந்தன. தற்போது வெளிநாட்டு பறவைகள், தமிழகத்துக்கு வருவது குறைந்துள்ளதற்கு நீர் நிலப்பகுதிகள் குறைந்ததும் ஒரு காரணம்.

ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும்

சுற்றுச்சூழலுக்கு அடித்தள மாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் நீர், நிலப்பகுதிகளில் உயிர்ப்பன்மை அதிகம் இருக்கும். தமிழகத்தில் முக்கியமான நீர், நிலப்பகுதிகள், அசம்பு நிலம், சதுப்பு நிலம், கடல் முகத்துவாரம் போன்றவை ஆகும். அசம்பு நிலம் என்பது நன்னீருடன் கூடிய தாவரங்கள் மற்றும் சில மரங்கள் அடங்கிய பகுதியாகும். ஆனால், சதுப்பு நிலத்தில் மரங்கள் இருக்காது. சில புற்கள், படரும் மரத் தாவரங்கள், காணப்படும். பொதுவாக அசம்பு நிலங்கள், வனப்பகுதியின் உயர்வான பகுதியில் காணப்படும். கொடைக்கானலில் பேரிஜம், கோனாறு, வட்டப்பாறை போன்றவை அசம்பு நிலங் களாகும்.

கொடைக்கானல் மலைப்பகுதி களில் உள்ள இந்த அசம்பு பகுதிகளில் பல்வேறு வகையான வன உயிரினங்கள் காணப்படும். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரிக்கு மேல் இந்த அசம்பு பகுதிகளை நேரில் காணலாம். ஆண்டு முழுவதும் அசம்பு பகுதியில் தண்ணீர் இருக்கும். ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒரு பங்கு மரம் மற்றும் வனம் இருக்க வேண்டும். இந்தியாவில் 7,89,164 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி உள்ளது. இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 24.01 சதவீத மாகும்.

பெருகிவரும் மக்கள் தொகை, தொழிற்சாலையால் இது சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது. தமிழகத்தில் நீர், நிலப் பகுதிகள் முறைப்படுத்தப்படாமல் உள்ளன. இந்த ஆண்டு சரியான அளவில் மழை பெய்தும் அனைத்து குளங்களும் நிரம்பாமல் இருப்பதே இதற்கு சாட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x