Published : 14 Feb 2015 10:11 AM
Last Updated : 14 Feb 2015 10:11 AM

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம்

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை சட்டக் கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.

அப்போது, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியபோது, சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கோஷமிட்டது குறித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கடும் கண்டனம் தெரிவித்தார்.

விசாரணையின்போது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறுகை யில், “நீதிபதிகள் நியமனம் குறித்து போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை முறையாகத் தெரிவிக்க வேண்டும். 150 ஆண்டுகள் கால வரலாற்று பாரம்பரியம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பும், மரபும் பாதுகாக்கப்பட வேண்டும். எனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீருக்கு திரும்பிப் போக வேண்டுமென சில வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். ஊருக்குப் போவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.

தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி வழக்கறிஞர்கள் என்னை பலதடவை சந்தித்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தாவிட்டால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுகிறது. வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்குள்ளேயே வந்து கோஷமிட்டால் அதிகாரிகள் எப்படி உங்களை மதிப்பார்கள்? பொதுமக்களும் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? எனவே, இந்த நீதிமன்றத்தின் பாரம்பரியம், மாண்பு, மரபு கட்டிக் காக்கப்படுவதும், சீர்குலைவதும் வழக்கறிஞர்கள் கையில்தான் இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x