Published : 08 Feb 2015 01:34 PM
Last Updated : 08 Feb 2015 01:34 PM

ராமேசுவரம் மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு: யாழ்பாணம் மீனவர்கள் குற்றச்சாட்டு

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ராமேசுவரம் மீனவர்களின் அத்து மீறல் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஒவ்வொரு முறையும் சிறைப்பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வந்தது. மீனவர்களை இலங்கை சிறைச்சாலைகளில் அடைத்தும், பின்னர் விடுவித்து வந்தனர். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்ததால் இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்ற சிறிசேனா, யாழ்பாணம் சிறையில் உள்ள 15 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்ததுடன் கடந்த ஜுன் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரையிலும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 87 தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இல்லாமல் கடந்த ஒரு மாத காலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ராமேசுவரம் மீனவர்களின் அத்துமீறல் யாழ்பாணம் கடற்பகுதியில் அதிகரித்துள்ளது என யாழ்பாண மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து யாழ்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனி எமிலியாம்பிள்ளை நமது செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு முன்னர் தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதை இலங்கை கடற்படையினர் தடுத்தும், அத்துமீறும் மீனவர்களையும் கைது செய்தும் வந்தனர்.

ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கை கடற்படையினர் சுதந்திரமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் அனுமதிக்கின்றனர். இதனால் இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக ராமேசுவரம் மீனவர்கள் யாழ்பாணம் மற்றும் மன்னார் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் போது இலங்கை மீனவர்களின் நாட்டுப் படகுகளை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தும் நாசம் விளைவிக்கின்றனர். இதனை கண்டித்து யாழ்பாணத்திலுள்ள இந்தியத் தூதரக அலுவலகம் முன் போராட்டங்களை நடத்த உள்ளோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x