Published : 05 Feb 2015 05:35 PM
Last Updated : 05 Feb 2015 05:35 PM

நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அடிப்படை வசதிகளை வலியுறுத்தி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளாக தொடரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. தண்ணீர் வசதி, உணவுக்கூடம், உணவு வசதி, கழிப்பறை வசதி அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒய்எம்சிஏ தேசிய கவுன்சில் தலைவர் ரோலண்ட் வில்லியம்ஸ் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தந்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று மாணவர்கள் கூறினர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற முயன்ற ஒய்எம்சிஏ கல்லூரி தாளாளர் ஜெயராஜ் தியா கடந்த மாதம் 30ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டார். போராட்டம் நடத்திய பிறகே அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், ஜெயராஜ் தியாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன என்று மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த கல்லூரிக்கு ரெண்டரை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் நலனுக்குப் பயன்படுத்தினாலே போதும். அதை ஜெயராஜ் தியாவே மாணவர் நலனுக்காக செய்துவிடுவார். ஆனால், அவரை செயல்படவிடாமல் தடுக்கின்றனர் என்று மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x