Last Updated : 23 Feb, 2015 11:38 AM

 

Published : 23 Feb 2015 11:38 AM
Last Updated : 23 Feb 2015 11:38 AM

சமூக பாதுகாப்புத் திட்டத்தில் முறைகேட்டைத் தடுக்க 32 லட்சம் பயனாளிகள் ஆன்லைனில் கண்காணிப்பு

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 8 சமூக பாதுகாப்புத் திட்டங்களில் முறை கேடுகளைத் தடுக்க 32 லட்சம் பயனாளிகளை ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. பயனாளி களின் ஆதார் எண்கள் மற்றும் செல்போன் எண்களையும் சேகரிக் கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் 32 லட்சம் பேருக்கு, முதியோர் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், தேசிய விதவையர் திட்டம் உள்ளிட்ட 8 சமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் ஆண்டுதோறும் நடக்க வேண்டிய கள ஆய்வுப்பணி முறையாக நடக்காததால், ஏராளமான போலி பயனாளிகள் சேர்ந்தது தெரியவந்தது.

இதை தடுக்க தீவிர கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 2 லட்சம் போலி பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப் பட்டனர். பயனாளிகள் குறித்த தகவல் தொகுப்பும் வருவாய்த் துறையால் தயாரிக்கப்பட்டு, இப்பணி தற்போது முடிவடைந் துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து பயனாளிகளின் விவரங்களையும் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் வகையில் அனைத்து தகவல்களும் வருவாய்த் துறையால் தொகுக்கப்பட்டுவிட்டன. இனி புதிதாக பயனாளி சேர்க்கப்பட்டால் அது பற்றிய தகவல் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். கிராமம் வாரியாக பயனாளிகளைக் கண்காணிக்க முடியும் என்பதால், பயனாளிகளின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் உடனடி விசாரணையை தொடங்க முடியும்.

பயனாளிகளின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குக்கு பணம் அனுப்பும்போது, சில பயனாளிகள் முன்பு விடுபட்டுப் போவதுண்டு. தாமதமாக போய்ச் சேருவதாகவும் புகார் இருந்தது. ஆனால், ஆன்லைனில் தகவல் திரட்டியபிறகு, இப்பிரச்சினை தீர்ந்துவிட்டது.

5 லட்சம் ஆதார் எண்கள்

மேலும், பயனாளிகளின் ஆதார் எண்களையும், நாங்கள் தயாரித்துள்ள தகவல் தொகுப்பில் சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஒரே பயனாளி இரு இடங்களில் ஓய்வூதியம் பெற்றால் தெரிந்துவிடும். தமிழகத்தில் தற்போது சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள் 5 லட்சம் பேரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுவிட்டன. அதிகபட்சமாக, கன்னியா குமரியில் 50 ஆயிரம் பேரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்னும் ஆதார் திட்டப் பணி முடியாததால் மிகக் குறைவாகவே (4000) எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆதார் எண் இல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தடை இல்லை.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற மனுசெய்வோர் இனி ஆன்லைனில் மனு செய்யவும், இணைய வசதியில்லாதோர் அரசு பொதுச் சேவை மையங்களுக்குச் சென்று மனு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பொதுச் சேவை மைய ஊழியர்களுக்குப் பயிற்சி யளிக்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை குறித்து பயனாளிகளின் செல்போன் களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தாலுகா அலுவலகத்துக்குச் சென்று அங்கு தமது செல்போன் எண்ணைப் பயனாளிகள் பதிவு செய்துவிட்டால், பிரதி மாதம் ஓய்வூதியம் அனுப்பப்பட்டதும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x