

'வனச் சரகர் பணியிடங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து கோவை வனக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 9 நாட்களாக பல்வேறு நூதனப் போராட்டங்களில் இவர்கள் ஈடுபட்டனர். வனக் கல்லூரியில் படித்த மாணவர்களை, வனப் பணியிடங்களுக்கு நியமனம் செய்யாததால் வனமும், வன தேவதையும் மாண்டுவிட்டதாக குறிப்பிடுவதுபோன்று 10-வது நாளாக நேற்று மாணவிகள் முகத்தில் மஞ்சள் பூசி, வாய்க்கட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாணவ, மாணவிகள் ஒப்பாரி வைத்தும், இன்னும் பலர் வரிசையாக படுத்தும் போராடினர்.
இந்தப் போராட்டம் குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘6 மாதங்களுக்கு முந்தைய எங்கள் போராட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வேளாண்மைத் துறை மற்றும் வனத்துறை அமைச்சர்கள் கொடுத்தனர். ஆனால் இப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றனர். அமைச்சர் களை அழைக்காததற்கு ஸ்ரீரங்கம் தேர்தலை காரணமாகக் கூறுகின்றனர். எனவேதான் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது என்றனர்.