Published : 06 Feb 2015 09:19 AM
Last Updated : 06 Feb 2015 09:19 AM
பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் உள்ளிட்ட 3 பேரிடம் சிறையில், விசாரணை நடத்த சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தபோது அவரது வீட்டில் இருந்த 323 பி.எஸ்.என்.எல். தொலை பேசி இணைப்பு களை முறைகேடாகப் பயன் படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரிஷியன் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, சிறையிலே அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் நேற்றுமுன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவுதமன் உள்ளிட்ட 3 பேர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி இந்த மனுக்களை நேற்று விசாரித்து, “கவுதமன் உள்பட 3 பேரிடம் புழல் மத்திய சிறையில், சிறை கண்காணிப்பாளர் முன்னி லையில் சிபிஐ விசாரணை நடத்தலாம்” என்று உத்தர விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT