Published : 14 Feb 2015 01:55 PM
Last Updated : 14 Feb 2015 01:55 PM
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்குதான் ஓட்டு போட்டாயா என்று சத்தியம் செய் என அதிமுகவினர் மிரட்டியதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. 81.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், அதிமுகவினர் வாக்களித்த பெண்களை மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் தொகுதி மணப்பாறை ஒன்றியம் பொத்தமேட்டுப்பட்டி புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இங்கு ஆண்டவர்கோவில் பூசாரிப்பட்டியை சார்ந்த பொதுமக்கள் வாக்களித்தனர்.
வாக்களித்துவிட்டு வந்த பெண்களிடம்,''அதிமுகவுக்குதான் ஓட்டு போட்டாயா? குழந்தை மீது சத்தியம் செய்'' என்று கேட்டு மிரட்டி உள்ளனர்.
பெண்கள் இதுகுறித்து பேசுகையில், ''சத்தியமா ஓட்டு போட்டீங்களான்னு கேட்டாங்க. நம்பிக்கை இல்லையான்னு கேட்டோம். காசைக் கொடுத்திடு''ன்னு மிரட்டினாங்க.
ஓட்டு போடக் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு என்று பெண்களை அதிமுகவினர் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT