Published : 10 Feb 2015 10:15 AM
Last Updated : 10 Feb 2015 10:15 AM

ராணிப்பேட்டை கழிவுத்தொட்டி விபத்து: சஸ்பெண்ட் அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை

ராணிப்பேட்டை அருகே 10 பேர் பலியான சிப்காட் கழிவுத்தொட்டி விபத்து தொடர்பாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் வளாகத்தில் உள்ள சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலைய கழிவுத்தொட்டி உடைந்து 10 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொது சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் அமிர்தகடேசன், நிர்வாகக் குழு இயக்குநர்கள் சுப்பிரமணி, ஜெயச்சந்திரன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். மேலும், பொது சுத்திகரிப்பு நிலையத்தின் உறுப்பினர்கள் 80 பேருக்கும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், கழிவுத்தொட்டி விபத்து தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் காமராஜ், உதவிப் பொறியாளர் முரளிதரன், வேலூர் சுற்றுச்சூழல் இணை தலைமைப் பொறியாளர் சார்லஸ் ஆகியோர் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். மூவரிடமும் தனித்தனியாக 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர், தேவைப்படும் நேரத்தில் விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறி, மூவரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கூறும்போது, ‘சிப்காட் கழிவுத்தொட்டி விபத்து தொடர்பாக இதுவரை பொது கழிவு சுத்திகரிப்பு நிலையத்தின் உறுப்பினர்கள் 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x