Published : 28 Feb 2015 09:53 AM
Last Updated : 28 Feb 2015 09:53 AM

பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்: தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்றது

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத் தேர்வுகளுக்கான முன்னேற் பாடுகள் குறித்து தலைமைச் செயலர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ல் தொடங்கி 31-ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 32 ஆயிரத்து 186 பேர் எழுத உள்ளனர்.

பொதுத் தேர்வுகள் தொடங்க வுள்ள நிலையில், தேர்வுகளை சிறப்பாக நடத்துவது குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி கடந்த 25-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்தினார். துறையின் முதன்மைச் செயலர் டி.சபீதா முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தலைமைச் செயலகத்தில்..

இந்த நிலையில், பொதுத் தேர்வுகளுக்கான முன்னேற்பாடு கள் குறித்த ஆலோசனை கூட்டம் கோட்டையில் தலைமைச் செயலர் கே.ஞான தேசிகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமா னுஜம், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் டி.பிரபாகர ராவ், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா, எரிசக்தித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள், வினாத்தாள், விடைத்தாள் பாதுகாப்பு, தடையில்லாமல் மின்சார வசதி, எதிர்பாரா வகையில் மின்வெட்டு ஏற்பட்டால் தேவையான ஜெனரேட்டர் வசதி, தேர்வெழுதும் மாணவர்கள் உரிய நேரத்தில் மையங்களை சென்றடைய கூடுதல் போக்குவரத்து வசதி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x